09/12/2025
திருப்பஞ்சலி கோவில் என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயிலாகும், இது ஞீலிவனேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்குள்ள சிவபெருமான் கல்வாழை மரத்தின் கீழ் அருள்பாலிப்பதால் 'ஞீலி' என்ற பெயர் வந்தது, மேலும் இது எமதர்மனுக்கு பரிகாரம் செய்யும் தலமாகவும், திருமணத் தடைகளை நீக்கும் தலமாகவும் கருதப்படுகிறது, மேலும் இது 275 பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகும்.
முக்கிய அம்சங்கள்:
பெயர்கள்: திருப்பைஞ்ஞீலி, ஞீலிவனேஸ்வரர் கோவில், திருப்பஞ்சலி, வாழை வனநாதர்.
தலைவர்: அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் (சிவபெருமான்).
அம்பாள்: அருள்மிகு விசாலட்சி (நீள்நெடுங்கண் நாயகி).
தல விருட்சம்: கல்வாழை (ஞீலி).
சிறப்பு: எமதர்மன் பிறந்த தலம், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலம், அப்பருக்கு கட்டமுது கொடுத்த தலம்.
அமைவிடம்:
திருச்சிராப்பள்ளிக்கு அருகில், மண்ணச்சநல்லூர் தாலுகாவில் திருப்பைஞ்ஞீலி என்ற ஊரில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில் என்ற பெயரிலேயே அதிகம் அறியப்படுகிறது, மேலும் இது பல பக்தர்களால் தென்கைலாசம் என்றும் அழைக்கப்படுகிறது.
தலச் சிறப்பு
திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட தர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்தத் தலம். குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது.
எமனுக்கான சிறப்புச் சந்நிதி உள்ளமையால், இங்கு நவக்கிரகங்கள் கிடையாது.
நித்தமும் இரவில் நடராசப் பெருமானை வணங்கும் வசிட்ட மாமுனி, ஒரு முறை இங்கு வந்து இரவில் இங்கு தங்க நேர்ந்தமையால், இறைவனார் அவருக்கு தமது ஆடலரசன் தோற்றத்தினை இவ்விடத்திலேயே காட்டியருளினார்.
அப்பர் பெருமான் இத்தலத்துக்கு வர விரும்பி நடக்கையில் வழி தவறி நிற்கையில், சிவனே அந்தணர் வடிவில் அவரது பசியாற்ற கட்டுச்சோறு அளித்து இத்தலத்திற்கு வழிகாட்டுவித்தார்.
"சோற்றுடைய ஈஸ்வரன்" என்னும் பெயர் கொண்டு அவருக்கு இத்தலத்தில் ஒரு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளது.
திரு ஆனைக்காவினைப் போன்று ஐந்து பிரகாரங்கள் கொண்ட இத்தலத்தில், ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அவை விசாலாட்சி, எமன், கல்யாணி, அக்னி, தேவ, அப்பர் மற்றும் மணியங்கருணை என்பனவாகும்.
இத்தலம், சம்பந்தர், சுந்தரர் மற்றும் அப்பர் ஆகிய நாயன்மார்களின் பாடல் பெற்ற தலமாகும்.
இது காவேரி நதியின் வடகரையில் பாடல் பெற்ற தலங்களில் 61ஆம் தலமாக விளங்குகிறது.
ஒவ்வொரு வருடமும், புரட்டாசி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில், சுயம்பு லிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் படர்வதைக் காண்பது மெய்யனுபவமாக விளங்கும்.
இறைவன் பொதிசோறு கொடுத்த நிகழ்வு
திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய தலங்களையடுத்து, திருநாவுக்கரசர் இத்தலம் நோக்கிவந்தபோது தண்ணீரின் தாகமும், பசியும் அவரை வாட்டின.
அவருடைய களைப்பைப் போக்க எண்ணிய சிவபெருமான் அவர் வரும் வழியில் ஒரு குளத்தையும், தங்கி இளைப்பாறுவதற்காக ஒரு மண்டபத்தையும் உருவாக்கி கட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் வடிவில் காத்துக்கொண்டிருந்தார்.
களைத்து வந்த அப்பருக்கு பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி இறைவன் கூற, அப்பரும் அவ்வாறே செய்தார்.
அந்தணரிடம் அவர் எங்கு செல்கின்றார் என்று அப்பர் கேட்க, தானும் திருப்பைஞ்சீலி செல்வதாக இறைவன் கூறவே இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். திருப்பைஞ்சீலி கோயிலின் அருகில் வந்தவுடன் அந்தணர் மறைந்தார். அப்போதுதான் இறைவனே அந்தணராக வந்து, உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார்.
ஞானசம்பந்தருக்கு இறைவன் பொதிசோற்றினை திருக்குருகாவூர் கோயிலில் கொடுத்தார்.
வரலாற்றுச் சிறப்பு
இது பல்லவர் காலக் கோயிற்கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது.
பைஞ்ஞீலி மகாதேவர் மற்றும் பைஞ்ஞீலி உடையார் ஆகிய பெயர்களில் இது சோழர் காலக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.