24/01/2017
ஒரு சிறு நகரத்தின் வியாபார வெற்றியாளர்களை, இரண்டே பிரிவுகளில் பட்டியலிட்டு விடுகிறேன்.
முதல் கேட்டகிரியில் இருப்பவர்கள் பழைய ஆசாமிகள்.
சொல்ல பட்ட ஊர் சின்ன கிராமமாக இருக்கிற போதே, வியாபாரத்தை ஆரம்பித்து இப்போது தழைத்து நிற்பவர்கள்.
இடமோ அல்லது கடையோ அவர்களுடைய சொந்த சொத்தாக இருப்பதால், மாத செலவுக்கான அழுத்தம் குறைவு.
இரண்டாவது லிஸ்டில் இருப்பவர்கள், ஊர் பெரியதான பிறகு வியாபாரத்துக்குள் நுழைந்தவர்கள்.
மாத செலவுகளை சரி கட்டுவதோடு, போட்டியை வேறு சமாளிக்க வேண்டும்.
நான் இப்போது குறி வைப்பது இவர்களைத்தான்.
இந்த குழுவை கூர்ந்து கவனித்தால், வெற்றியாளர்களில் பலரும் வெளியூரிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள்.
ஊருக்குள்ளே கூட, ‘எங்கிருந்தோ வந்தவன் எல்லாம் கொடி கட்டி பறக்கிறான்’ என்கிற மாதிரி பேச்சு இருக்கும்.
அவர்களது வெற்றிக்கு காரணம்தான் என்ன..?
இதற்கான பதிலை தேடுகிற நேரத்தில் நம்மையும், நம்மை சுற்றி இருக்கிற சமூகத்தையும் ஒரு சுய மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கிறது.
அதற்கு முன்னால், எங்கிருந்தோ வந்தவர்களை கவனிப்போம்.
இவர்கள், ‘இழப்பதற்கு ஒன்றுமில்லை’ என்கிற மனதோடு புதிய ஊரில் காலை பதித்த்வர்கள். ‘இட பெயர்ச்சி’ என்பது அவ்வளவு எளிதான் நிகழ்வல்ல.
அவர்களுடைய வியாபார முடிவுகள் தைரியமானவை.
அதோடு, சுற்றி இருப்பவர்களை பற்றி அவர்கள் கவலை பட தேவை இல்லை. அவர்களுக்கு வெற்றி மட்டுமே லட்சியம்.
அதே சமயம், உள்ளூர்காரனின் நிலையை பாருங்கள்.
‘ஊருக்குள்ளே கத்தரிக்காய் வியாபாரம் செய்தால் லாபம் கிடைக்கும்’ என்பது அவனுடைய உறுதியான கணிப்பு.
அவனுடைய சுற்றமோ, சுற்றி நின்று கும்மியடிக்கிறது.
‘இஞ்சினீயரிங் படித்து விட்டு கத்தரிக்காய் வியாபாரமா..?’ என்று கேலியாய் சிரிக்கிறது.
தோல்வியின் ரேகையை பதிப்பதிலேதான் அவர்களுடைய குறி.
அடுத்த முக்கியமான விஷயம் எதிர்பார்ப்பு.
ஊருக்குள்ளே நம்ம ஜாதிக்காரன் பாதி பேர் இருக்கிறான் என்கிற நினைப்பில் வியாபாரத்தை ஆரம்பித்தால், ஏமாந்துதான் போவீர்கள்.
எந்த ஜாதிக்காரனாய் இருந்தாலும், விலை மற்றும் தரம் மட்டுமே வாங்குகிற பொருளுக்கான பென்ச்மார்க்குகள்.
சொந்தக்காரர்களும், நண்பர்களும் நம்மிடம் வியாபாரம் செய்யவே மாட்டார்கள் என்றும் சொல்ல முடியாது.
கடன் கொடுக்கிற வரை ரெகுலராக வருவார்கள்.
கடனை திருப்பி கேட்டால், போச்சு..!
திரும்பியே பார்க்க மாட்டார்கள். வாங்கின கடனை மறந்து விட்டு , தெரியாதவன் கடையில் காசை கொடுத்து வாங்குவார்கள்.
தெரிந்தவன் அல்லது சொந்தக்காரன் என்று வருபவர்களுக்கு குறைந்த விலையில் பொருள் கொடுத்திருந்தாலும், நீங்கள் காலி.
இதை பெருமையாக அவர்கள் சொல்லி திரிந்து, உங்களை பலருக்கும் எதிரி ஆக்கி விடுவார்கள்.
இப்போது ஊருக்கு புதிதாக தொழில் தொடங்க வருபவர்களை பற்றி.
இந்த ஊருக்கு இது ஆகாது என்று நீங்களாகவே முடிவு செய்திருக்கிற வியாபாரம் ஒன்றை கூட, கையில் ஏந்தி வருவார்கள்.
பெரும்பாலும், அவர்கள் மைனாரிட்டி ஜாதியாக இருப்பார்கள்.
அவர்களை பொருத்த வரை, எல்லா கஸ்டருமே ஒன்றுதான்.
ஒரே விலை; மற்றும் கடன் கிடையாது.
தாங்கள் சம்பாதிப்பதை, பெருபாலானாவர்கள் வியாபாரம் செய்கிற ஊரில் முதலீடு செய்ய மாட்டார்கள்.
தேவை இல்லாமல் ஊர்காரர்களிடம் பேச மாட்டார்கள் (முக்கியமாக அரசியல் மற்றும் ஜாதி சார்ந்த விஷயங்கள்).
இதெல்லாம் இல்லாமல், வேறு காரணங்கள் இருந்தாலும் தெரிந்து கொள்ள ஆசை. ASA.