24/02/2026
ஜுஃரானா : வரலாற்று சிறப்பு!
"அல்லாஹ்வுக்காகவே ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்..." (குர்ஆன் 2:196)
புனித குர்ஆனின் ஸூரத்துல் பகராவிலுள்ள இந்த வசனம், 'ஜுஃரானா' (Ji'rana) என்னுமிடத்தில் தங்கியிருந்த போதுதான் அருளப்பெற்றது.
பெயர்க்காரணம்!
'ஜுஃரானா' எனும் இப்பெயர், பனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த குரைஷி வம்சத்துப் பெண்மணி ஒருவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. அவரது பெயர் ரீத்தா; அவரது பட்டப்பெயரே 'ஜுஃரானா'. மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், நாள் முழுவதும் நூலை நூற்று துணி நெய்வதும், பிறகு கஷ்டப்பட்டு நெய்த அந்தத் துணியைத் தானே துண்டு துண்டாகக் கிழித்துப் போடுவதுமாக இருந்தார். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் அறிவிப்பின்படி, புனித குர்ஆனின் ஸூரத்துந் நஹ்லில் குறிப்பிடப்படும் பெண்மணி இவரே:
"கடுமையாக உழைத்து நூலை நூற்று, பின்னர் அதைத் துண்டு துண்டாகச் சிதைத்த அந்தப் பெண்ணைப் போல நீங்கள் ஆகிவிடாதீர்கள்..." (குர்ஆன் 16:92)
மஸ்ஜிதுல் ஜுஃரானா!
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுமார் 24 கிலோமீட்டர் வடகிழக்கில் மஸ்ஜிதுல் ஜுஃரானா (مسجد الجعرانة) அமைந்துள்ளது. இது புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணியும் 'மீக்காத்' (Miqat) எல்லைகளில் ஒன்றாகும். ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு, ஹுனைன் போருக்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் சில நாட்கள் இவ்விடத்தில் தங்கியிருந்தார்கள். அங்கிருந்தே இஹ்ராம் அணிந்து, உம்ராவிற்காக மக்காவிற்குப் பயணமானார்கள்.
வரலாற்று நிகழ்வுகள்
ஹிஜ்ரி எட்டாம் ஆண்டில், முஸ்லிம் படைகள் ஜுஃரானாவில் சில நாட்கள் முகாமிட்டிருந்தன. ஹுனைன் போரில் ஹவாஸின் கோத்திரத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போர்ச் செல்வங்களை (கனீமத்) நபிகளார் (ஸல்) அவர்கள் இங்கு வைத்தே விநியோகித்தார்கள்.
விநியோகம் முடிந்த பின், ஹவாஸின் கோத்திரத்தினர் மனம் வருந்தி நபிகளாரிடம் வந்து, தங்களது கைதிகளையும் செல்வத்தையும் திருப்பித் தருமாறு வேண்டினர். கைதிகள் அல்லது செல்வம் - இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை நபிகளார் அவர்களுக்கு வழங்கினார்கள். அவர்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்தபோது, அவர்களைத் திருப்பி ஒப்படைக்குமாறு நபித்தோழர்களுக்கு நபிகளார் (ஸல்) அவர்கள் பணித்தார்கள். நபித்தோழர்களும் அதனை மனமுவந்து நிறைவேற்றினர்.
அன்றைய மாலை வேளையில் நபிகளார் (ஸல்) அவர்கள் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள். உம்ராவை முடித்த பின், அதே இரவிலேயே மதீனாவிற்குப் புறப்பட்டார்கள்.
அன்சாரிகளின் நெகிழ்ச்சியான சம்பவம்!
அன்சாரிகளுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு மகத்தான வரலாற்று நிகழ்வு இந்த ஜுஃரானாவில்தான் அரங்கேறியது. இஸ்லாத்தின்பால் மக்களை ஈர்க்கவும், புதிய முஸ்லிம்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் போரில் கிடைத்த செல்வத்தின் பெரும் பகுதியை நபிகளார் அவர்களுக்குப் பகிர்ந்தளித்தார்.
அன்சாரிகளில் சில இளைஞர்களுக்கு இவ்வளவு தாராளமான பங்கு கிடைக்காததால், அவர்கள் சற்று வருத்தமுற்றனர். இச்செய்தி நபிகளாருக்கு (ஸல்) எட்டியது. உடனே அவர் அன்சாரிகளை ஒன்றுகூட்டி இவ்வாறு பிரகடனம் செய்தார்கள்:
“அன்சாரிகளே! மற்றவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் தங்கள் இல்லங்களுக்கு ஓட்டிச் செல்லும்போது, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே உங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா?”
இதைக் கேட்டதும் அன்சாரிகளின் கண்கள் பனித்தன. அவர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன், தங்களுக்கு கிடைத்த இப்பெரும் பாக்கியத்திற்காக மகிழ்ச்சி அடைந்தனர்.
A M Nadwi