05/10/2025
தமிழ்க் கூறும் நல் உலகில் ...
கருணையே வடிவான வள்ளல் பெருமானார் வருவிக்கவுற்ற நன்னாள்... அக்டோபர் -5...!
🙏🙏🔥🙏🙏
வள்ளல் பெருமானாரின் வருவிக்கவுற்ற (பிறந்தநாளை) தனிப்பெருங்கருணை நாளாகத் அறிஞர் பெருமக்கள் கொண்டாடி வருகின்றனர்...!
அனைவருக்கும் இனிய தனிப்பெரும் கருணை நன்னாள் நல்வாழ்த்துகள்....!
🙏🙏🔥🙏🙏
இவ் இனிய நன்னாளில் வள்ளல் பெருமானாரைப் பற்றி... வள்ளல் பெருமானாரின் அருள் வரிகளின் வழி சற்று சிந்திப்போமே..!
🙏🙏🔥🙏🙏
" அகத்தே கருத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்திடுதற்கு என்றே எனை இந்த
உலகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே"
என்பது வள்ளல்பெருமனாரின் திருஅருட்பா (5485) பாடல் வரிகள்.
இப் பாடல் மூலம் நாம் புரிந்துகொள்வது தான் என்ன?
#இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திட...... "
👆
எனும் வரிகளிலிருந்து நாம் புரிநந்துகொள்வது என்ன...?!
🔥ஒவ்வொரு மனிதரும் இப்பிறவியிலேயே , தம்முள் உள்ளொளியாய் விளங்கும் இறையாற்றலை உணர்ந்து அனுபவிப்பதற்கான, சமயம் கடந்த பொதுவான வழியைக் காட்டவே வள்ளலார் தோன்றினார்கள்.
🔥ஒவ்வொரு மனிதரும் கடவுளின் உண்மை நிலையை உணர்ந்து அம்மயமாகி - அருள்மயமாகி - அகம் மகிழ்ந்து வாழ்வதற்குரிய மெய்ஞ்ஞான வழியைப் போதிப்பதற்காகவே வள்ளலாரை இறைவன் இவ்வுலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
#எனை இந்த உலகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் ; அருளைப் பெற்றேனே!"* (எனும் வரிகளின் மூலம்....)
🔥அருட்பேரொளியான இறைவன் ; உலகத்தார்க்கு உண்மையான ஞான வழியைப் போதிப்பதற்காகவே வள்ளலாரை இவ்வுலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
🙏 இவ்வுலகத்திற்கு வந்த வள்ளலாரும் அப்பேரிறைவனின் அருளையும் முழுமையாகப் பெற்றார்கள்....(என்பதை இப்பாடல் வரிகளால் புரிந்துகொள்ள முடிகின்றது)
#உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட...."* (எனும் வரிகளின் மூலம்...)
🔥இறைவனின் பெயரால் உலகில் நிலவும் பற்பல கண்மூடி வழக்கத்தை ஒழித்து ; சடங்கு - சம்பிரதாய - பேதங்கள் அனைத்தையும் நீக்கி ; உலக மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்த்து ; உலகர் அனைவர்க்கும் பொதுவான - புத்தம் புதிய ஞான நெறியான சன்மார்க்க வழியைப் போதிப்பதற்காகவே வள்ளலாரை இறைவன் இவ்வுலகத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
#அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்தி...."* (எனும் வரிகளின் மூலமாக...)
◆ பற்பல பேதங்களால் பாழ்பட்டு - இருண்டு கிடக்கும் மனித மனங்களைத் திருத்துவதற்காகவே வள்ளலாரை இறைவன் இவ்வுலகத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
◆ வள்ளலார் வகுத்தளித்த சன்மார்க்கத்தில் அகத்தூய்மை - மனத்தூய்மை மிகமிகமுக்கியம்.
#மனத்துக்கண் மாசு (குற்றம்) இலன் ஆதல்...அனைத்து அறன்" எனும் திருவள்ளுவரின் தமிழ் மறைக்கேற்ப ; வள்ளலார் காட்டிய ஞான வழியில் அகத்தூய்மை - புனிதத்தன்மை மிக மிகமுக்கியம்.
◆வள்ளல்பெருமனார் வகுத்தளித்த சன்மார்க்க ஞான வழியில் ; மனதில் தீய எண்ணங்களை வைத்துக் கொண்டு , புற உலகத்தார்க்கு நல்லவர் போல் வேடமிடும் வஞ்சகர்களுக்கு இடமில்லை....புறத்தூய்மையைவிட அகத்தூய்மை மிக மிக முக்கியம்.
[வள்ளலார் ; தாம் இவ்வுலகத்திற்கு வந்ததன் காரணத்தை .... அவர் வார்த்தைகளிலின் வழியே சிந்தித்தோம்..... !
மேலும் கூடுதல் தகவலுக்காக ...... சில அகச்சான்றுகள்]
★ வள்ளல் பெருமனார் இறை அருளைப் பெற்றார்கள் ; இறையாற்றலை முழுவதுமாகக் கைவரப்பெற்றார்கள். இதற்கான அகச்சான்றுகள் வருமாறு...
#மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை..."
எனும் வரிகளின் மூலம் ; தனக்கு முன்னிருந்த சித்தர்கள் , முத்தர்கள் , தேவர்கள்..... என யாரும் அடையாத இறை அருளியலை வள்ளலார் முழுமையாகப் பெற்றார்கள் என்பதை அறிய முடிகின்றது.
#அருட்பேரொளியால் இன்பையும் நிறைவித்து , என்னையும் நி(உ) ன்னையும் ஓர் உருவம் ஆக்கியான்...."
எனும் வரிகளின் மூலம் , 'இறைவனும் வள்ளலாரும் ஓர் உருவமாக இரண்டற கலந்தார்கள்' என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
#என்சாமி_எனது_துரை_என்னுயிர்_நாயகனார்_இன்று_வந்து ...... எனது பேர் உடம்பில் கலந்து ; உளத்தே பிரியாமல் இருப்பார்.....இதுதான் சத்தியம் சத்தியமே....!"
எனும் வள்ளலார் பாடிய இறுதி அருட்பா (5818) மூலம் ; வள்ளலார் இருமுறை சத்தியமிட்டு உலகத்தார்க்கு கூறுவதன் பொருளாழத்தைப் புரிந்துகொள்வோம்.
◆ இறைவனுடன் வள்ளலார் ஓர் உருவமாக இரண்டற கலந்தார்கள் என்பதை பலர் ஏற்க மறுக்கின்றனரே....(அவர்களுக்கான பதில்... வள்ளலாரின் வார்த்தைகளில்...👇👇👇
#ஒரு பதார்த்தத்தை வாழ் நாள் முழுவதும் உண்ணாதவர்கள் ; அப்பதார்த்தத்தை சுவையற்றது என்று கூறுவதைப் போன்றது.*
★வள்ளலார் காட்டிய ஞான வழியில் ; கடவுளைப் புறத்தே தேடுவது கிடையாது.
அனைத்துப் பேதங்களையும் கடந்து , தன் அகத்துள் பேரொளியைக் காண்பதே வள்ளலாரின் கடவுள் கொள்கை (கட + உள் = கடவுள்)
#எத்துணையும்_பேதம்_உறாது ; எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே ;
ஒத்த உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் ,
அவர் உ(ள்) ளம் தான் , சுத்த சித்துருவாய் எம் பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெளிந்தேன்"
எனும் வள்ளலார் பாடிய அருட்பா (5296) வரிகளை ஒன்றி கவனிப்போம்..!
●வள்ளலார் காட்டிய ஞான வழியில் எவ்வித பேதத்திற்கும் இடமில்லை.
●நடைமுறை உலகில் உள்ள சடங்கு சம்பிரதாய சமய வழிகளுக்கு அப்பாற்பட்டது வள்ளலாரின் ஞான வழி.
●தன்னுள் விளங்கும் கடவுள் நிலையை உணர்ந்து அம் மயமாதலே வள்ளாரின் ஞான வழி.
தமிழ்க் கூறும் நல்லுலகமே....! வள்ளாரின் படைப்பிலக்கியங்களை முழுவதுமாக கசடற கற்க முயற்சி செய்....! உண்மையான ஆன்மீகத்திற்கும் சமயத்திற்குமுள்ள வேறுபாடு தெளிவாகப் புரியும்..
தமிழகத்தில் இறைவன் பெயரால் கவ்வியுள்ள சடங்கு- சம்பிர்தாய - பேதங்களை நீக்கி ; புத்தம் புதிய வெளிச்சத்தை... வள்ளலாரின் வெள்ளொளி பாய்ச்சும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை..
★ வள்ளலார் வருவிக்கவுற்ற நன்னாளைப் போற்றுவோம்...!
ஒவ்வொரு நாளும் வள்ளலார் வழியில் நடைபயில்வோம்!
சுத்த சன்மார்க்க சுகநிலை அடைவோம்!
அனைவருக்கும் இனிய தனிப்பெருங்கருணை நன்னாள் நல்வாழ்த்துகள்...!
(கருத்துப் பதிவும் பகிர்வும் : அருள்பாவலர் சக்திவேல்.வே )