05/01/2017
நண்பர் ஒருவரின் பதிவு பிரதமரின் அதிவேக நெடுந்சாலை அமைப்பு பற்றி.
இலங்கையில் அதிவேக வீதிகள் பற்றிய நற்செய்தி:-
இலங்கை வளர்ச்சியடைந்த தேசமாக இருந்திருந்தால் இப்போது பருத்திதுறையில் இருந்து தெய்வேந்திர முனைக்கு பயணிக்க ஒரு மணி நேரம் போதுமாக இருந்திருக்கும்!
என்ன செய்வது இங்குள்ள அரசியல், நடந்தேறிய போர் என்பன அங்கவீன நிலையிலேயே இந்த தேசத்தை விட்டுவைத்துள்ளது!
கடந்த அரசு வெளிநாடுகளில் கடன்களை பெற்றாவது நிறைவேற்றி முடித்த கொழும்பு - கட்டுநாயக்க விமான நிலைய அதிவேக பாதை, கொழும்பு- மாத்தறை அதிவேக பாதை என்பன பாராட்டத்தக்கவை.
இப்போது அதன் தொடராக கொழும்பு - தம்புள்ளை மற்றும் கொழும்பு - கண்டி ஆகிய அதிவேகப்பாதைகளின் நிர்மாண பணிகள் ஆரம்பமாகவிருக்கும் சேதி மிக்க மகிழ்ச்சியை தருகிறது.
கொழும்பு- தம்புள்ளை அதிவேக பாதை 90 நிமிட பயண நேரத்தையும், கொழும்பு - கண்டி அதிவேக பாதை 60 நிமிட பயண நேரத்தையும் கொண்டிருக்கும்!
அதேவேளை outer circular பாதையாக கொட்டாவையிலிருந்து கடவத்தையினை இணைத்துள்ள அதிவேக பாதையும் கட்டுநாயக்க விமான நிலையம் வரை செல்லவுள்ளது.
பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்தளை விமான நிலையம் வரை அதிவேக பாதை நிறைவுபெறும். இது சுமார் 100 நிமிட பயணமாக அமையும்.
ஏலவே இந்த பாதை மாத்தறை வரை செல்கிறது.
மாத்தறை - மத்தளை வரையிலான பகுதியே நிர்மாணிக்க வேண்டியுள்ளது.
அண்மையில் கடவத்தை - கொட்டாவ outer circular பாதையில் பயணித்து தெஹிவளையினை அடைய எனக்கு 30 நிமிடங்கள் மாத்திரமே எடுத்தது.
இது வழமையான கடவத்தை - கொழும்பு பாதையினூடான பயணமாக இருந்திருந்தால் அந்த நேரத்தின் வாகன நெருக்கடிக்கு அமைய இரண்டு மணி நேரத்துக்கு அதிகமாக எடுத்திருக்கும்!
ஆகவே இன்னும் மூன்றரை வருடங்களுக்குள் கொழும்பு- தம்புள்ளை அதிவேக பாதையில் 90 நிமிடங்களில் பயணிக்க இயலும் என்ற நம்பிக்கை பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
நான்கு கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்த திட்டத்தின் நான்காம் கட்டமான குருநாகல்- தம்புள்ளை இணைப்பிற்கு சீன நிறுவனமொன்று கைச்சாத்திடுகிறது.
68.7 km கொண்ட இந்த தூரத்திற்கு கிலோ மீற்றர் ஒன்றிற்கு 2.5 பில்லியன் ரூபாய்கள் செலவின மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
முதலாம் கட்டம்: கடவத்தை - மீரிகம (37.1 km)
இரண்டாங்கட்டம்: மீரிகம - குருநாகல் (76.8 km)
மூன்றாங்கட்டம்: பொத்துஹர - கலகெதர(32.5km)
இந்த பாதை அமைந்த பிறகு காத்தான்குடிக்கும் கொழும்புக்குமான பயணநேரம் மூன்று மணித்தியாலங்களாக மாறக்கூடும்.
இப்போது ஆறேழு மணி நேரங்கள் பயணிக்கவேண்டியிருக்கிறது!
இந்தப்பாதையில் பயணிக்கும் காலம் வரை இறைவன் ஆயுளை நீடித்துப்போட வேண்டுமென்று மனசு அவாவுறுகிறது.
ஏனென்றால் இந்த பாதைகளில் கடந்த பல வருடங்களாக நேரவிரயத்தையும், கடும் சீரழிவுகளையும், கஷ்டங்களையும் சந்தித்தாகிவிட்டது.
#தமிழ்இளைஞன்